Friday, December 19, 2014

ஜன்னல் - சிறுகதை - ரமேஷ் கே சேலம் - கதை எண் 1

ஜன்னல் - சிறுகதை போட்டி எண் 1

ரமேஷ் கே சேலம்

"என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற
இளம் நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற
கண்ணாலே பேசாதே கல்யாணம் பேசு
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு
மருதாணி அறைச்சு வச்சேன்
மஞ்ச தண்ணி கரைச்சு வச்சேன் ராசா ராசா
உருகாம உருகி நின்னேன்...."
தம்பீ!!! நால் ரோடு வந்தாச்சு இறங்குப்பா.
என கண்டக்டர் என்னைப் பார்த்து குரல் கொடுக்க... உருகுவதை சட்டென நிறுத்தி, அசட்டு சிரிப்புடன் எழுந்தேன்.
தினமும் இதே பேருந்தில் வருவதால் அண்ணன் அதட்டலாய் நினைவூட்டும் அளவுக்கு பழகிவிட்டிருந்தார்!!!
பேருந்து பயணத்தில் இளையராஜா பாடல்கள் சுகம்.
அதுவும் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தால், கிரங்கிவிடுகிறேன்..
இது எதனால் இருக்கும் என நினைத்தவாரே வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தேன்....
திடீரென யாரோ என்னை பார்ப்பது போல் தோன்றவே... சட்டென பார்த்தேன்...
ஜன்னல் கம்பிகளை பிடித்தவாரே ஒரு முகம் என்னை பார்த்தது!!!
தீர்க்கமான பார்வையாக அது இருந்தது. நான் பார்க்கிறேன் என்று பார்வையை மாற்றவில்லை. கிட்டத்தட்ட இது தினமும் தொடர்ந்தது. பல முறை அப்படி பார்க்கையில் நான் சிரித்திருக்கிறேன், ஆனால் பதிலுக்கு அந்த பக்கம் இருந்து முகம் பிரகாசமடையும், கண்கள் மலரும் அவ்வளவுதான். கிட்டத்தட்ட ஓரிரு மாதங்கள் இது தொடர்ந்தது. போய் ஏன் இப்படி பாக்கறீங்க தினமும்னு கேக்கலாமா?...
வேண்டாம்... நான் எங்கடா உன்ன பார்த்தேன்.. என திட்டிவிட்டால்...
வந்த எண்ணத்தை கைவிட்டேன்.
பின் பெங்களூரில் வேலை கிடைத்து, இங்கு வந்து கிட்டத்தட்ட மறந்தேவிட்டேன் அந்த ஜன்னலை!!!
"மச்சி இந்த ஆப்பர்ச்சூனிட்டி பாரேன். பெஸ்ட்டுடா கிடைச்சா யூ. எஸ்லயே கிட்டத்தட்ட செட்டில் ஆன மாதிரிதான். லைஃப் ஸ்டைலே மாறிடும்டா. இந்த திசைக்கே ஒரு பெரிய கும்பிடா போட்டுட்டு ஓடிடலாம். அப்ளை பண்ணிப் பாப்போம்டா"
நெட்டில் எதோ காட்டி துள்ளிக்குதித்தான் நண்பன்.
எனக்கும் அதை படிக்க படிக்கவே. இப்போதே அங்கு வேலை கிடைத்துவிட்டதைப் போல மிதப்பாக இருந்தது.
"சரிடா இன்னைக்கு ஊருக்கு போறேன்ல. அம்மாட்டயும் இது பத்தி பேசறேன்"
"அப்ளை பன்றதுக்கே பர்மிசனா, இதெல்லாம் ஓவர்டா மச்சி. இவ்லோ சென்சிடிவ்வா இருந்தீனா முன்னேறவே முடியாது" என்றான். சிரித்துவிட்டு கிளம்பினேன்.
பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கையில்..
என்னையும் அறியாமல் கண்கள் அந்த ஜன்னலைப் பார்த்தது.
ஜன்னல் மூடியிருந்தது!
ஒரு பெண் வாசற்காலில் விளக்கு வைத்துக் கொண்டிருந்தாள். அருகில் செல்லும் போதுதான் கவனித்தேன். உள்ளே அந்த புகைப்படத்திற்கு மாலை போட்டிருந்தது. கீழே ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
ஒரு மாதிரி படபடப்பாகிவிட்டது எனக்கு...
என்னது! தினமும் என்னை பார்த்த பார்வைக்கு அர்த்தம் சொல்லாமலே மரணமா!!!
"என்ன சார்.. யார் வேனும்?"
விளக்கு வைத்த பெண் என் நினைவை கலைத்த பிறகுதான்.. நான் அங்கேயே நின்றுவிட்டிருந்தது, மூளைக்கு உறைத்தது...
"இல்லீங்க. இவங்க.. இவங்க எப்படி?... "
"இவங்களை உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்டு.. ஆச்சரியமாக பார்த்தாள் அந்த பெண்.
"ஆமாங்க. தெரியும். இவங்க எப்ப? எப்படி?... " அதற்கு மேல் என்ன கேட்பதென தெரியாமல் விழித்தேன்.
"வயசானா எல்லாம் போய் சேர வேண்டியதுதான!"
அந்த பதிலில் திருப்தியடையாத என் முகம் புரிந்தவளாய் தொடர்ந்தாள்.
"நான் பக்கத்து வீடுங்க. இந்த பாட்டிக்கு இங்க யாரும் கூட இல்ல. ஒரு வாரம் முன்ன இறந்துச்சு. எப்ப உயிர் போச்சுன்னு சரியா தெரியல"
அதிர்ச்சியாக இருந்தது எனக்கு தீர்க்கமான அந்த பார்வை கண் முன் வந்து போனது.
"பாட்டிக்கு பிள்ளைங்க... "
நான் முடிக்கும் முன்பே அவள் தொடர்ந்தாள்.
"பாட்டியோட பையன் வெளி நாட்ல வேலை செய்றாரு. தாத்தாவும் எப்போவோ போய் சேர்ந்துட்டாரு. பையன் இது சாவுக்கு வந்துட்டு உடனே கிளம்பிட்டாரு. வெளிநாடெல்லாம் போக வேனாம் இங்கயே இருன்னு எவ்வளவொ சொல்லுச்சி. அவர் கேக்கல.. இப்ப பாருங்க பெத்தவ சாவுக்கு கூட நேரத்துக்கு வர முடியாம, வந்தும் கடனேன்னு எதோ பண்ணிட்டு ஓடி... என்ன வாழ்க்கையோ. காச கொடுத்துட்டா ஆச்சா?!. இது உயிரோட இருக்கப்ப தன் வாழ்க்கைதான் பெரிசுன்னு.. அனாதையா விட்டுட்டு போயிட்டாங்க. இப்ப எதோ தீட்டாம் வாரிசுக்கு பிரச்சினையாயிடுமாம். அதுக்கு விளக்கு வைக்க என்கிட்ட சாவி கொடுத்துட்டு போயிருக்காங்க. உயிரோட இருக்கப்ப கூட, எங்கம்மாவ பாத்துக்கங்கன்னு ஒரு வார்த்தை எங்க கிட்ட சொல்லிட்டு போனதில்லை. இப்ப அவங்களுக்கு பிரச்சினை ஆயிடும்னு விளக்கு வைக்க சொல்றாங்க... என்ன ஜென்மங்களோ.. இந்த பாட்டி என்னடான்னா... ரோட்ல போறவன் வர்றவனையெல்லாம் பாத்துட்டு... எம்மவன் ராசு மாதிரியே இருக்கான்னு உருகும்... "
சுரீரென்றது எனக்கு... அந்த பார்வைக்கான அர்த்தம் இப்போதுதான் புரிந்தது. என்னையும் பார்த்து அவன் மகன் ராசுவை கற்பனையில் பார்த்திருக்கிறதா பாட்டி. என்ன கொடுமை இது. இப்படி ஒருவரை தவிக்கவிட்டு என்ன சுக போக வாழ்வு வேண்டி இருக்கிறது. ஒரு திரைப்படப் பாடலைக் கேட்டு கூட உருகித்தவிக்கும் நமக்கு உறவுத் தவிப்பு புரிவதில்லையோ!!!
அந்த பாட்டியின் புகைப்படத்தை பார்த்தேன், அதே தீர்க்கமான பார்வை!
"போக மாட்டேன் இங்கதான் இருப்பேன்" என்றேன் என்னையறியாமல்.
"என்ன.. என்ன சொன்னீங்க?"
"இல்ல... இல்ல ஒன்னுமில்லீங்க.. அந்த ஜன்னலை கொஞ்சம் திறந்து வைங்க ப்ளீஸ்"
என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு வேகமாக நகர்ந்தேன்.
எனக்கு பின்னால் ஜன்னல் திறக்கும் ஓசை கேட்டது.

No comments:

Post a Comment